இருவருககு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியா பட்டானிச்சூர் பகுதி முடக்கப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் தொழில்நுட்ப பீடத்தின் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த இரு தொற்றாளர்களுடனும் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா